ஸ்கார்பரோவில் வாகன நிறுத்துமிடத்தில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல் அவென்யூ பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் குறித்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர்.
குற்றுயிராக மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்தும், சம்பவயிடத்திலேயே சிறுவன் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இது மிகவும் கொடூரமான சம்பவம் என ரொறன்ரோ பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 39 வயதான பெண்மணியின் வாகனம் மோதியே சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் போது சிறுவனின் பெற்றோரும் உடனிருந்துள்ளனர். சிறுவன் வணிக வளாகத்தின் கடைகளை கண்டு மகிழ்ச்சியில் நடந்து செல்ல, துரதிர்ஷ்டவசமாக வாகனம் மோதியுள்ளது.
சம்பவத்தின் போது வாகனம் வேகமாக வந்ததா என்ற கேள்விக்கு, உரிய தகவல்களை திரட்டி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சாரதியும், சிறுவனின் பெற்றோரும் சம்பவயிடத்தில் கதறியபடி இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.